ஹிஜாப் அணிந்தால் வேலை இல்லையா? எதிர்த்துத் தொடுத்த வழக்கில் வெற்றி!

சகோதரி புஷ்ரா நோவா

ஹிஜாப் அணிந்து பணிக்கு வந்த ஒரே காரணத்தினால், பத்தொன்பது வயதுள்ள புஷ்ரா நோவா என்ற முஸ்லிம் பெண், தான் பணிபுரியும் ஒப்பனை நிலையத்தின் உரிமையாளர் ஸாரா டெஸ்ரோஸிர்ஸ் என்பவரால் கடந்த மே-2008 இல் பணி நீக்கம் நீக்கப்பட்டுள்ளார்.


"பெண் வாடிக்கையாளர்கள் விதவிதமான அலங்காரம் செய்து கொள்ளும் என் அழகு நிலையத்தில், என் வியாபாரத்திற்கு பாதகமாக தலையினை மறைத்து பணிக்கு வந்ததாலேயே இவரை பணி நீக்கம் செய்ததாக" த சன் இதழுக்கு அளித்த பேட்டியில் கடை உரிமையாளர் ஸாரா ஒப்புக் கொண்டுள்ளார்.

வேலை போன விரக்தியோடு வெளியேறிய புஷ்ரா நோவா, மனம் சோர்ந்து போய் உட்கார்ந்து விடாமல், துணிவுடன் நீதிமன்றத்தை அணுகி கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.

இருவரையும் அழைத்து விசாரித்த இலண்டனில் அமைந்துள்ள பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கான நீதிமன்றம் (British employment tribunal panel) இறுதியில் புஷ்ரா நோவாவிற்கான வேலை பறி போனதற்காகவும் உணர்வுகள் புண்பட்டமைக்காகவும் நஷ்ட ஈடாக 4000 பிரிட்டிஷ் பவுண்ட்களை வழங்கியுள்ளது. அத்துடன் தலையினை மறைக்கும் ஒரு துணி ஒருவரின் பணியை எங்ஙனம் பாதிக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

மேலும், மத ரீதியிலான பிரச்னையாக உருவெடுக்காமல் தவிர்க்க, தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வன்கொடுமையாகத் தான் இதனைக் கருத வேண்டும் என்று இவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் இவ்வகைச் செயல்கள் பிரிட்டனில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதற்கும் இஸ்லாமியர்கள் அதனைத் துணிவோடு எதிர்கொண்டு சட்ட ரீதியிலான வெற்றிகளைப் பெற்று வருகின்றனர் என்பதற்கும் இத்தகைய நிகழ்வுகள் சான்றாக உள்ளன.
 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen